ஆப்ரிக்காவின் கொம்பு நாடுகள் வறட்சியினால் “ஒரு தலைமுறையை இழக்கும் ஆபத்து” : கர்தினால்
கவலை
அக்.08,2011. ஆப்ரிக்காவின் கொம்பு நாடுகள் தற்போது எதிர்நோக்கும் கடும் உணவுப் பஞ்சம்
போன்ற நெருக்கடிகள் வருங்காலத்தில் ஏற்படாதவாறு தடை செய்வதற்கு ஆப்ரிக்கச் சமுதாயங்கள்
மேலும் அதிகமானப் பள்ளிகளைக் கட்ட வேண்டும் எனப் பரிந்துரைத்தார் கர்தினால் இராபர்ட்
சாரா. ஆப்ரிக்காவின் கொம்பு நாடுகளைப் பாதித்துள்ள கடும் வறட்சி மற்றும் உணவு நெருக்கடி
குறித்து திருப்பீட பத்திரிகை அலுவலகத்தில் இடம் பெற்ற நிருபர் கூட்டத்தில் பேசிய, Cor
Unum என்ற திருப்பீடப் பிறரன்பு அவையின் தலைவரான கர்தினால் சாரா, ஆப்ரிக்காவில் கல்விக்கூடங்களின்
முக்கியத்துவம் பற்றிக் கூறினார். தற்போதைய இந்த உணவு நெருக்கடியால் இலட்சக்கணக்கான
மக்களின் வாழ்வு மட்டும் அச்சுறுத்தப்படவில்லை, அத்துடன் இந்தப் பஞ்சத்திலிருந்து தப்பிப்பதற்காகப்
புலம் பெயர்ந்துள்ள மக்களும் எதிர்காலத்தில் இழக்கப்பட்ட தலைமுறைகளாக இருப்பார்கள் என்றும்
கர்தினால் சாரா எச்சரித்தார். உயிர் வாழ்வதற்காகப் புலம் பெயர்ந்துள்ள ஆப்ரிக்காவின்
கொம்பு நாடுகளின் இலட்சக்கணக்கான மக்கள் எதிர்காலத்தில், ஒரு நாடு இன்றி, வீடு இன்றி,
வேலையும் தங்களுக்கானச் சமூகமும் இன்றி அகதிகளாகவும், சட்டத்துக்குப் புறம்பே குடியேறியவர்களாகவும்
இருப்பார்கள் என்று கவலை தெரிவித்தார் ஆப்ரிக்காவின் கினி நாட்டைச் சேர்ந்த கர்தினால்
சாரா. பசி மற்றும் பஞ்சத்தால் ஒரு தலைமுறை முழுவதும் இழக்கப்படும் ஆபத்து எதிர்நோக்கப்படுவதால்,
திறமைகளும் சமூகங்களும் எதிர்காலமும் அமைக்கப்படுவதற்கு உதவும் பள்ளிகள் மேலும் உருவாக்கப்படுமாறு
பரிந்துரைத்தார் “கோர் ஊனும்” தலைவர் கர்தினால் சாரா. ஐ.நா.வின் கணிப்புப்படி ஆப்ரிக்காவின்
கொம்பு நாடுகளில் தற்போது ஒரு கோடியே 30 இலட்சம் பேருக்கு உடனடி உணவு உதவிகள் தேவைப்படுகின்றன
என்று தெரிய வந்துள்ளது.