2011-10-07 14:46:11

பெண்ணுரிமை ஆர்வலர்களுக்கு 2011ம் ஆண்டு நொபெல் அமைதி விருது


அக்.07,2011. அகிம்சா வழியில் பெண்ணுரிமைக்காக உழைத்து வரும் லைபீரிய நாட்டு அரசுத்தலைவர் Ellen Johnson Sirleaf, லைபீரிய அமைதி ஆர்வலர் Leymah Gbowee, ஏமன் நாட்டு Tawakkul Karman ஆகிய மூவருக்கும் 2011ம் ஆண்டுக்கான நொபெல் அமைதி விருது வழங்கப்படுவதாக நார்வே நொபெல் விருதுக் குழு இவ்வெள்ளிக்கிழமை அறிவித்தது.
அமைதியைக் கட்டியெழுப்பும் பணிகளில் முழுமையாகப் பங்கெடுப்பதற்குப் பெண்களுக்கு இருக்கும் உரிமைகளுக்கும் பெண்களின் பாதுகாப்புக்கும் இம்மூவரும் வன்முறையற்ற வழிகளில் உழைத்து வருகின்றனர் என்று சொல்லி அவர்களுக்கு இவ்விருதை வழங்குவதாக அக்குழு கூறியுள்ளது.
72 வயதாகும் Johnson Sirleaf, லைபீரியாவில் 2005ம் ஆண்டில் சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அரசுத்தலைவராவார்.
லைபீரிய அமைதி ஆர்வலர் Leymah Gbowee, கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் பெண்களைக் குழுக்களாக உருவாக்கி அந்நாட்டுப் புரட்சிப்படைகளுக்குச் சவாலாக இயங்கி வருபவர்.
32 வயதாகும் Tawakul Karman மூன்று பிள்ளைகளுக்குத் தாய். இவர் பத்திரிகையாளர்க்கான மனித உரிமைகள் குழுவான Women Journalists without Chains என்ற குழுவுக்குத் தலைமை தாங்கி நடத்தி வருகிறார். ஏமனில் கடந்த சனவரியில் அரசுத்தலைவர் பதவியிலிருந்து இறக்கப்பட்ட Ali Abdullah Saleh வுக்கு எதிரானப் போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்களில் Karman முக்கியமானவர்.
சமுதாயத்தின் எல்லா நிலைகளிலும் வளர்ச்சிக்கானத் தாக்கத்தை ஏற்படுத்துவதில் ஆண்களைப் போன்று பெண்களும் ஒரேமாதிரியான வாய்ப்புக்களைப் பெறாத வரையில் உலகில் சனநாயகத்தையும் நிலையான அமைதியையும் நாம் அடைய முடியாது என்று நார்வே நொபெல் குழு கூறியது.








All the contents on this site are copyrighted ©.