2011-10-07 14:41:49

இந்தியாவில் பாலர் தொழிலாளரை ஒழிப்பதற்கான ஒரே ஆயுதம் கல்வி – கர்தினால் கிரேசியஸ்


அக்.07,2011. உலகிலே அதிகமான பாலர் தொழிலாளரைக் கொண்டுள்ள இந்தியாவில், இதனை ஒழிப்பதற்கான ஒரே ஆயுதம் கல்வியே என்று இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் கூறினார்.
இந்தியாவில் பாலர் தொழிலாளரின் நிலை குறித்துப் பேசிய கர்தினால் கிரேசியஸ், பாலர் தொழிலாளருக்கு எதிரான ஒரே ஆயுதம் கல்வி என்று கூறினார்.
இதனாலே இந்தியக் கல்வி உரிமைச் சட்டத்தில், 6 முதல் 14 வயது வரையுள்ள சிறார்க்கு கட்டாயக் கல்வி வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் பள்ளிக்குச் செல்ல முடியாத சிறார் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்றும் கர்தினால் கூறினார்.
கத்தோலிக்கர், இந்திய மக்கள் தொகையில் சுமார் 2 விழுக்காட்டினராக இருந்த போதிலும், அவர்கள் நடத்தும் பள்ளிகளில் 60 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவை கிராமங்களில் இருக்கின்றன, இவை ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கு உதவுகின்றன என்றார் அவர்.
நாட்டின் நலவாழ்வுப் பணிகளில் ஐந்தில் ஒரு பாகத்தைத் கத்தோலிக்கத் தி்ருச்சபை செய்கின்றது எனவும் கர்தினால் கிரேசியஸ் கூறினார்
இந்தியாவில் பாலர் தொழில் முறை சட்டத்தால் தடைசெய்யப்பட்டிருந்தாலும், 2001ம் ஆண்டின் புள்ளி விபரக் கணக்கெடுப்பின்படி நாட்டில் 14 வயதுக்கு உட்பட்ட ஒரு கோடியே 27 இலட்சம் பாலர் தொழிலாளர் உள்ளனர், ஆயினும் இவ்வெண்ணிக்கை 4 கோடியே 50 இலட்சம் என்று இந்திய மற்றும் வெளிநாட்டு சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.







All the contents on this site are copyrighted ©.