ஆப்ரிக்காவிலும் அமெரிக்காவிலும் மனிதக் கொலைகள் அதிகம் – ஐ.நா.ஆய்வு
அக்.07,2011. மத்திய மற்றும் தென் அமெரிக்காவிலும், தெற்கு மற்றும் மத்திய ஆப்ரிக்காவிலும்
இளைஞர்கள் தாங்கள் கொலை செய்யப்படும் ஆபத்துக்களை அதிகம் எதிர்நோக்குகின்றனர் என்று UNODC
என்ற ஐ.நா.போதைப்பொருள் மற்றும் குற்றப்பிரிவு அலுவலகம் அறிவித்தது. இந்த ஐ.நா. அலுவலகம்
இவ்வியாழனன்று வெளியிட்ட ஆய்வறிக்கையில், இளையோரைத் தவிர, வீட்டு வன்முறைகளில் பெண்கள்
கொலைசெய்யப்படும் அச்சுறுத்தலும் அதிகமாகி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஒரு இலட்சம்
ஆண்களுக்கு 11.9 பேர் வீதம் வன்முறையை எதிர்நோக்கும்வேளை, ஒரு இலட்சம் பெண்களுக்கு 2.6
பேர் வீதம் இத்தகைய இறப்புக்களை எதிர்நோக்குகின்றனர் என்று அவ்வாய்வு கூறுகிறது. துப்பாக்கிகள்
பயன்படுத்தப்படுவது குறித்த ஐ.நா. தீர்மானம் கடுமையாய் நடைமுறைப்படுத்தப்படுவதன் அவசியத்தை
இந்தப் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன என்று அவ்வாய்வு கூறுகிறது. கடந்த ஆண்டில்
உலகில் 4,68,000 கொலைகள் நடத்தப்பட்டன. இவற்றில் சுமார் 36 விழுக்காடு ஆப்ரிக்காவிலும்
31 விழுக்காடு அமெரிக்காவிலும் 27 விழுக்காடு ஆசியாவிலும் 5 விழுக்காடு ஐரோப்பாவிலும்
1 விழுக்காடு ஓசியானியாவிலும் நடத்தப்பட்டன என்று ஐ.நா. ஆய்வு கூறுகிறது.