இந்திய கத்தோலிக்க மருத்துவமனைகள் அவையின் ஆண்டுக் கூட்டத்தில் புதுடில்லி பேராயர்
அக்.06,2011. கிறிஸ்துவின் பிரசன்னத்தை உலகிற்குத் தெளிவாக உணர்த்தும் ஒரு பணியே குணமாக்கும்
பணி என்று புதுடில்லி பேராயர் வின்சென்ட் கொன்செஸ்ஸாவோ கூறினார். CHAI என்று அழைக்கப்படும்
இந்திய கத்தோலிக்க மருத்துவமனைகள் அவையின் 68வது ஆண்டுக் கூட்டத்தை வாரணாசியில் உள்ள
நவ சாதனா என்ற நிறுவனத்தில் இப்புதனன்று துவக்கி வைத்து, திருப்பலியாற்றிய பேராயர் கொன்செஸ்ஸாவோ,
அங்கு கூடியிருந்த மருத்துவர்கள் மற்றும் தாதியர் அனைவரும் இறையாட்சியின் கருவிகள் என்று
கூறினார். இயேசு வாழ்ந்த காலத்தில் யூதர்கள் அல்லாதோரும் அவரிடம் குணம் பெற்றுத் திரும்பியதைப்
போல், கிறிஸ்துவர் அல்லாதோரும் நம்மை நாடிவந்து குணம் பெற்றுத் திரும்பும்போது, இறைவன்
உலகம் முழுவதையும் பாகுபாடின்றி ஆசீர்வதிப்பது தெளிவாகிறது என்று பேராயர் சுட்டிக்காட்டினார். வாரணாசி
ஆயர் மற்றும் பிற துறவற சபைகளின் தலைவர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், பேசிய CHAI
இயக்குனர் அருள்தந்தை Tomi Thomas, பழம்பெரும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள வாரணாசி இன்னும்
பல வழிகளில் உள்ளூர குணம் பெற வேண்டிய அவசியம் உள்ளது என்று எடுத்துரைத்தார்.