2011-10-05 16:26:12

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரானக் குற்றங்கள் அதிகரிப்பு - காவல்துறை உயர் அதிகாரி


அக்.05,2011. தமிழகத்தில், குழந்தைகளுக்கு எதிரான கடத்தல், பாலியல் வன்குற்றங்கள் போன்றவை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்று காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இக்குற்றம் தொடர்பாக, கடந்தாண்டில் மட்டும் 810 வழக்குகள் பதிவாகின என்றும், இது 2009ம் ஆண்டைவிட 27.8 விழுக்காடு அதிகம் என்றும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.
சிசுக்கொலை, குழந்தைகளைத் தொழிலாளர்களாக பயன்படுத்துவது, குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைப்பது, பாலியல் கொடுமை, கடத்தல், கொலை என பலவகையான குற்றங்கள் இடம் பெற்று வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
இவற்றைத் தடுக்க கடுமையானச் சட்டங்கள், தண்டனைகள் இருந்தாலும், கள்ளத்தொடர்பு, குடும்பப் பிரச்சனைகள் போன்ற சமூகப் போக்கு மாற்றங்களால், இத்தகைய குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என்று அந்தக் காவல்துறை அதிகாரி கூறினார்.
2004ம் ஆண்டிலிருந்து இந்த 2011ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி வரை தமிழகத்தில் காணாமல் போய்க் கண்டுபிடிக்கப்படாத குழந்தைகளின் எண்ணிக்கை, 1,220. இதில் பெண் குழந்தைகள் 625 என்றும் கூறப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.