அருள்பணியாளர்கள் உலகப் போக்குடன் இணைந்து நல்ல மதிப்பீடுகளை இழக்கக் கூடாது - வத்திக்கான்
உயர் அதிகாரி
அக்.05,2011. இவ்வுலகத்தோடும், மக்களோடும் தன்னை இணைத்துக்கொள்ளும் அருள்பணியாளர்கள்,
உலகப்போக்குடன் இணைந்து நல்ல மதிப்பீடுகளை இழக்கக் கூடாதென்று திருப்பீட உயர் அதிகாரி
ஒருவர் கூறினார். அருள்பணியாளர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள திருப்பீடப் பேராயத்தின்
தலைவரான கர்தினால் Mauro Piacenza, அமெரிக்காவில் பணியாற்றும் அனைத்து இஸ்பானிய அருள்பணியாளர்களையும்
இத்திங்களன்று லாஸ் ஆஞ்சலெஸ் நகரில் சந்தித்து உரையாற்றியபோது இவ்விதம் கூறினார். லாஸ்
ஆஞ்சலெஸ் பேராயர் Jose Gomez அழைப்பின் பேரில் அங்கு சென்றிருந்த கர்தினால் Piacenza,
21ம் நூற்றாண்டுக்குத் தேவையான அருள்பணியாளர்கள் எவ்விதம் வாழவேண்டும், பணியாற்றவேண்டும்
என்ற கருத்துக்களை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார். இன்றைய உலகில் பணியாற்றும் குருக்கள்
மக்களை மையப்படுத்திய பணிகளில் பணிவான மனதோடு ஈடுபட்டு, மனித மாண்பை உயர்த்தும் நோக்கத்துடன்
செயல்படுவதே முக்கியம் என்று கர்தினால் Piacenza சுட்டிக் காட்டினார். தன்னை மக்களின்
சேவைக்கு வழங்குவதன் மூலம், கிறிஸ்துவை இந்த உலகிற்கு வழங்கும் குருக்களே உலகம் பெறக்கூடிய
சிறந்த கொடைகள் என்று திருப்பீட உயர் அதிகாரி கர்தினால் Piacenza தன் உரையில் வலியுறுத்தினார்.