அக் 06, 2011. – வாழ்ந்தவர் வழியில்........, இயேசு சபை குரு மத்தேயு ரிச்சி
இத்தாலியைச் சேர்ந்த இயேசு சபை குரு மத்தேயு ரிச்சி, அன்று திருப்பீட அதிகாரத்தின் கீழிருந்த
மச்செராத்தா எனுமிடத்தில் 1552ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ம் தேதி பிறந்தார். சீனாவில்
இயேசு சபையை நிறுவியவர்களுள் இவரும் ஒருவர். இயேசு சபை குருவான இவர் தன் 25ம் வயதில்
இந்தியாவில் நற்செய்தி அறிவிப்புப் பணிக்கென விருப்பத்தை வெளியிட்டு, 1578ம் ஆண்டு செப்டம்பர்
மாதம் கோவா வந்தடைந்தார். நான்காண்டுகளுக்குப் பின் சீனாவில் மறைப்பணியாற்ற அனுப்பப்பட்டு
1582ல் மக்காவ் வந்தடைந்தார். முதலில் சீன மொழியையும் சீனக்கலாச்சாரத்தையும் நன்முறையில்
கற்றுத் தேர்ந்தார் குரு ரிச்சி. மிக்கேல் ருஜியேரி என்பவருடன் இணைந்து போர்த்துக்கீசிய-சீன
மொழி அகராதியையும் உருவாக்கினார். சீனாவின் வான்லி பேரரசரின் அரசாட்சி மன்றத்தில் ஆலோசகராக
சேவையாற்றுமாறு பேரரசரால் அழைக்கப்பட்டார். தலைநகர் பெய்ஜின்கின் மிகத்தொன்மை பேராலயமான
அமல உற்பவ அன்னை பேராலயத்தை உருவாக்கியவர் இவரே. இவருக்கு பேரரசர் வழங்கிய மிகப்பெரும்
உதவித்தொகை சீன இயேசு சபையின் பணிகளுக்கு உதவுவதாக இருந்தது. குரு ரிச்சி தன் இறுதிக்காலம்
முழுமையையும் சீனாவிலேயேச் செலவிட்டார். சீன தலைநகரில் 1610ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி
காலமானார் குரு. ரிச்சி.