2050க்குள் புகைப்பிடிப்போரில் நான்கு கோடிப் பேர் காச நோயால் இறக்கும் ஆபத்து - ஆய்வாளர்கள்
எச்சரிக்கை
அக்.05,2011. உலகில் புகைப்பிடிப்போரில் நான்கு கோடிப் பேர் காச நோயால் 2050ம் ஆண்டுக்குள்
இறக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். புகைப்பிடிக்காதவர்களைவிட புகைப்பிடிப்போர்
காசநோய்க் கிருமிகளால் பாதிக்கப்படும் அபாயம் இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாக பிரித்தானிய
நுரையீரல் நிறுவனத்தின் கௌரவ மருத்துவ ஆலோசகரான காசநோய் நிபுணர் John Moore-Gillon கூறினார். TB
எனப்படும் காசநோய்க் கிருமிகளால் புதிதாகத் தாக்கப்படுவோரில் பெரும்பாலானோர், ஆப்ரிக்கா,
கிழக்கு மத்தியதரைக்கடல் நாடுகள், தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் உள்ளனர் என்றும்
Moore-Gillon தெரிவித்தார். உலக நலவாழ்வில் உடனடியாக அக்கறை எடுக்கப்பட வேண்டிய ஒன்றாக
இந்தக் காசநோய் இருக்கின்றது என்று உலக நலவாழ்வு நிறுவனம் அறிவித்து சுமார் இருபது ஆண்டுகள்
ஆகிவிட்டன என்பதையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.