அக்.04,2011. லிபியா மற்றும் மால்டா ஆகிய நாடுகளுக்கான திருப்பீடத் தூதர் பேராயர் Tommaso
Caputo லிபியாவின் புதிய அரசுத் தலைவர்களைச் சந்திக்க Tripoli வந்திருப்பதற்கு தன் மகிழ்வைத்
தெரிவித்த Tripoliயின் அப்போஸ்தலிக்க நிர்வாகி பேராயர் ஜொவான்னி இன்னோசென்சோ மார்த்தினெல்லி,
அந்நாட்டின் முழு விடுதலைக்கும், நல் வாழ்வுக்கும் தலத்திருச்சபை அனைத்து முயற்சிகளையும்
மேற்கொண்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும், இத்தாலி நாடு லிபிய மக்களுக்கு உதவிகள்
செய்ய முன் வந்திருப்பதுபோல், பிற நாடுகளும் மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்ய முன்
வர வேண்டும் என்று பேராயர் மார்த்தினேல்லி கூறினார். லிபியாவில் சென்ற வாரம் நடைபெற்ற
சண்டைகளில் காயமுற்ற 25 பேரை இத்தாலிய இராணுவத்தினர் உரோம் நகருக்குக் கொண்டு சென்று
அவர்களை மருத்துவ மனைகளில் சேர்த்திருப்பதை சுட்டிக் காட்டி பேசிய பேராயர் மார்த்தினெல்லி,
பிற நாடுகளிலிருந்தும் இதே போன்ற உதவிகள் லிபியாவுக்கு மிக அவசரத் தேவையாக உள்ளது என்றார். Gaddafi
பிறந்த ஊரான Sirte என்ற இடத்தில் தொடர்ந்து சண்டைகள் நடைபெறுவதாகவும், அந்நகரின் 70000
மக்களில் 10000 க்கும் மேற்பட்டோர் அந்நகரை விட்டு வெளியேறியுள்ளதாகவும் ஆசிய செய்தி
நிறுவனம் கூறியுள்ளது.