மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அகிம்சாவின் சக்திமிக்க பலத்தைக்
காட்டுகின்றது – பான் கி மூன்
அக்.01,2011. சக்திநிறைந்த அகிம்சா வழியில் அமைதியான மாற்றங்களைக் கொண்டு வர முடியும்
என்பதற்குக் கடந்த ஆண்டில் பல்வேறு மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்க நாடுகளில் இடம்
பெற்ற அரசியல் மாற்றங்கள் எடுத்துக் காட்டுகளாய் இருக்கின்றன என்று ஐ.நா.பொதுச் செயலர்
பான் கி மூன் கூறினார். மகாத்மா காந்திஜி பிறந்த அக்டோபர் 2ம் நாள் அனைத்துலக அகிம்சா
நாள் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி வெளியிட்ட செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் பான்
கி மூன். துப்பாக்கியால் சுடுவதைவிட அதைக் கைவிடுவது மிகவும் வல்லமையானது என்பதை டுனிசியா,
எகிப்து மற்றும் பிற நாடுகளின் மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள் என்றும் அவரின் செய்தி
கூறுகிறது. ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் வன்முறையற்ற வழிகளைக் கையாளுமாறு இச்சர்வதேச
நாளில் கேட்பதாக பான் கி மூன் கூறியுள்ளார். இவ்வுலக நாள் 2007ம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது.