2011-09-30 16:08:03

புதிய தலைமுறைகளுக்குப் புதிய நற்செய்தி அறிவிப்பு வழிகளைக் கண்டுபிடிக்குமாறு திருத்தந்தை அழைப்பு


செப்.30,2011. ஐரோப்பிய ஆயர்கள் நற்செய்தி அறிவிப்புப் பணியில் புதிய வழிகளைக் குறிப்பாக, புதிய தலைமுறைகளுக்கு இப்பணியைச் செய்வதில் அவர்கள் தைரியத்துடன் எடுத்து வரும் புதிய முயற்சிகளை ஊக்கப்படுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
அல்பேனியத் தலைநகர் திரானாவில் இவ்வியாழனன்று தொடங்கியுள்ள ஐரோப்பிய ஆயர் பேரவைகள் அவையின் நான்கு நாள் நிறையமர்வுக் கூட்டத்திற்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.
மேய்ப்புப் பணிகள் மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு நடவடிக்கைகளில் ஐரோப்பிய ஆயர்கள் மத்தியில் கடந்த நாற்பது ஆண்டுகளாகக் காணப்படும் ஒத்துழைப்பு தொடரும் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்தார் திருத்தந்தை.
திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் எர்டோவுக்கு இச்செய்தியை அனுப்பியுள்ளார்.
மேலும், CCEE என்ற இந்த ஐரோப்பிய ஆயர் பேரவைகள் அவையில் ருத்தேனியன் (Ruthenian) பைசான்ட்டைன் ரீதித் திருச்சபையும் தற்சமயம் புதிதாக உறுப்பினராகச் சேர்ந்து இக்கூட்டத்தில் கலந்து கொள்கிறது.
இந்தப் புதிய வரவுடன் CCEE அவை, 33 ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பாக மாறியுள்ளது.
ருத்தேனியன் பைசான்ட்டைன் ரீதித் திருச்சபை, 1646ம் ஆண்டில் கத்தோலிக்கத் திருச்சபையில் இணைந்தது.
மேலும், காஸ்தெல் கந்தோல்ஃபோவில் தனது கோடை விடுமுறையை முடித்து இச்சனிக்கிழமை வத்திக்கான் திரும்புகிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.