2011-09-30 16:09:50

கடற்கொள்ளையர்களால் ஏற்படும் பெரும் செலவுகள் குறித்து ஐ.நா. எச்சரிக்கை


செப்.30,2011. கடற்கொள்ளையர்களால் கப்பல் தொழிலுக்கு ஏற்படும் பெரும் செலவுகள் குறித்து எச்சரித்துள்ள அதேவேளை, இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஐ.நா.நிறுவனங்களும் அரசுகளும் இராணுவங்களும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்குமாறு அனைத்துலக கடல்சார் நிறுவனப் பொது இயக்குனர் Efthimios Mitropoulos கேட்டுக் கொண்டார்.
செப்டம்பர் 29ம் தேதி உலக கடல்சார் தினம் கடைபிடிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்ட Mitropoulos, கடற்கொள்ளையர் பிரச்சனை கடுமையானதாக இருப்பதால் இதனை ஓர் அமைப்பால் மட்டும் எதிர்கொள்ள முடியாது என்று கூறினார்.
2010ம் ஆண்டில் மட்டும் 4185 கடற்தொழிலாளர்கள், கடற்கொள்ளையர்களால் ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளார்கள். 1090 பேர் பிணையக் கைதிளாக எடுத்துச் செல்லப்பட்டனர். 516 பேர் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டனர். இதனால் சுமார் 488 பேர் மனத்தளவிலும் உடலளவிலும் துன்புறுகின்றனர். இந்தப் புள்ளி விபரங்களையும் அவரின் செய்தி குறிப்பிடுகிறது.
கடற்கொள்ளையர்களின் குற்றங்களுக்கு அப்பாவி கடல் தொழிலாளர்கள் பலியாகும்வேளை, இந்தக் கொள்ளையர்களால் உலகப் பொருளாதாரத்திலும் ஆண்டுக்கு 700 கோடி டாலர் முதல் 1200 கோடி டாலர் வரை இழப்பு ஏற்படுகின்றது என்றும் Mitropoulos தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அக்டோபர் 13, 14 தேதிகளில் உரோமையில் உலக கடல்சார் தினம் சிறப்பிக்கப்படுகின்றது.








All the contents on this site are copyrighted ©.