செப்.30,2011. உலகின் முதியோர்களில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பகுதியினர் வளரும் நாடுகளில்
வாழும்வேளை, உலகளாவிய, மற்றும் தேசிய வளர்ச்சித் திட்டங்களில் முதியோர் இன்றும் பெரும்பாலும்
ஓரங்கட்டப்பட்ட நிலையில் உள்ளனர் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார். அக்டோபர்
முதல் தேதி அனைத்துலக முதியோர் தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு செய்தி வெளியிட்ட
பான் கி மூன், மத்ரித் சர்வதேச மாநாட்டில் முதியோர் குறித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுகள்
அமல்படுத்தப்படுமாறு வலியுறுத்தினார். முதியோரின் மனித உரிமைகள் மதிக்கப்படுமாறும்
அவர் அழைப்புவிடுத்துள்ளார். 2012ம் ஆண்டு இந்த மத்ரித் மாநாடு நடைபெற்றதன் 10ம் ஆண்டும்,
இந்த 2011ம் ஆண்டு, முதியோர்க்கென ஐ.நா. கொள்கைகளை வகுத்த 20ம் ஆண்டும் நிறைவுறுகின்றன
என்பதைச் சுட்டிக்காட்டி முதியோர் நலனில் அக்கறை காட்டுமாறு அவர் கேட்டுள்ளார்.