ஆசியாவில் மறைபரப்புப் பணிக்கு எதிரான சவால்கள் பற்றிகுவகாத்தி பேராயர்கருத்து
செப்.29,2011. உலக மயமாக்கும் போக்கு மற்றும் மத அடிப்படைவாதம் ஆகிய இரண்டும் ஆசியாவில்
மறைபரப்புப் பணிக்கு எதிரான பெரும் சவால்கள் என்று குவகாத்தி பேராயர் தாமஸ் மேனம்பரம்பில்
கூறினார். ஆசிய ஆயர்கள் அவை பாங்காக்கில் கூடி விவாதிக்கவிருக்கும் மறைபரப்புப் பணி
கருத்தரங்கைக் குறித்து FIDES செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில், ஆசிய ஆயர்கள்
பேரவையின் மறைபரப்புப் பணிக்குழுவின் தலைவரான பேராயர் மேனம்பரம்பில் இவ்வாறு கூறினார். திருவழிபாடுகளில்
கலந்து கொள்வோர் எண்ணிக்கை ஒவ்வொரு நாட்டிலும் குறைந்து வருவதைக் காணும்போது, உலகமயமாகும்
போக்கு பரவி வருவதையும், சிறப்பாக இந்தப் போக்கு இளையோரிடையே பரவி வருவதையும் காண முடிகிறது
என்று கூறிய பேராயர் மேனம்பரம்பில், மத அடிப்படை வாதமும் உலகமயமாகும் போக்கைச் சார்ந்தே
வளர்ந்து வருகிறது என்று கூறினார். இளையோரை மிக அதிக அளவில் கவர்ந்து வரும் இவ்விரு
போக்குகளையும் கட்டுப்படுத்த கத்தோலிக்க மறையானது தீவிரமான கொள்கைப் பரப்புப் பணியில்
ஈடுபடுவது சரியான முறை அல்ல என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் மேனம்பரம்பில், ஆழமான மத
கோட்பாடுகளே இவ்விரு போக்குகளிலிருந்தும் இளையோரை நல்வழிப் படுத்தும் என்ற தன் கருத்தையும்
வெளியிட்டார்.