கிறிஸ்தவ மறையை மறுதலிக்க மறுத்ததற்காக மரண்தண்டனையை எதிர்நோக்கியுள்ளார் இரானின் கிறிஸ்தவ
குரு
செப் 27, 2011. கிறிஸ்தவ மறையை மறுதலிக்க மறுத்ததற்காக மரண்தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்
இரானின் கிறிஸ்தவ குரு ஒருவர். கிறிஸ்தவ மறையை விட்டு விலக வேண்டும் என இரானின் நீதிமன்றம்
இருமுறை விண்ணப்பித்த போதும் அதற்கு மறுப்புத் தெரிவித்த கிறிஸ்தவக்குரு Yousef Nadarkhani,
இச்செவ்வாய் மற்றும் புதன் தினங்களில் இடம்பெறும் நீதிமன்ற வழக்கில் மீண்டும் மறுப்புத்
தெரிவிக்கும் பட்சத்தில் மரண தண்டனை உறுதிச்செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இசுலாம்
மதத்தைக் கைவிட்டு கிறிஸ்தவத்தை தழுவியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இவருக்கு மரணதண்டனை
விதிக்கப்பட்டிருந்தது. மீண்டும் இஸ்லாமிய மறைக்கு இவர் திரும்ப மறுக்கும்பட்சத்தில்,
மரணதண்டனை உறுதிச்செய்யப்பட உள்ளது. இரானில் குழந்தைகளுக்கு இசுலாம் தவிர ஏனைய மதப்படிப்பினைகள்
மறுக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பியதால் 2009ம் ஆண்டு அக்டோபர் 13ந்தேதி கைது செய்யப்பட்ட
கிறிஸ்தவக்குரு Nadarkhani, அதற்குச் சில காலத்திற்குப் பின்னரே இசுலாமியர்களிடையே கிறிஸ்தவ
மதத்தைப் பரப்ப முயன்றதாகப் புதிதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.