கத்தோலிக்க அமைப்புகளின் விழிப்புணர்வுத் திட்டங்களால் நிக்கராகுவா நாட்டில் வன்முறைகள்
குறைந்துள்ளன
செப் 27, 2011. குடும்ப வன்முறைகளைக் களைய உதவும் கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்புகளின்
விழிப்புணர்வுத் திட்டங்களால் நிக்கராகுவா நாட்டில் வன்முறைகள் குறைந்து,பெண்களின் வாழ்வு
பாதுகாக்கப்பட்டு, குடும்பங்களில் அமைதி நிலவுவதாக அரசு சாரா அமைப்புக்கள் தெரிவிக்கின்றன. நிக்கராகுவா
நாட்டில் 60 விழுக்காட்டுப் பெண்கள் வாழ்வில் ஒருமுறையாவது உடல்ரீதியாக தாக்கப்பட்டுளார்கள்
என்ற ஐநாவின் கூற்றை மேற்கோள் காட்டிய இவ்வமைப்புகள், தற்போது கத்தோலிக்க அமைப்புகளின்
உதவியால் இதில் பெரும் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கின்றன. CRS என்ற கத்தோலிக்க
இடர்துடைப்பு நிறுவனமும் கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பும் இணைந்து நடத்திய பல்வேறு
விழிப்புணர்வு மற்றும் உதவித்திட்டங்கள் மூலம் ஆண்களிடையே பொறுப்புணர்வு அதிகரித்து குடும்ப
வாழ்வு மேம்பட்டுள்ளதாக அரசு சாரா அமைப்புகள் தெரிவித்துள்ளன.