பிறரன்பு நடவடிக்கைகளுக்கென 100 கோடி ரூபாய் திரட்ட உள்ளது சீரோ மலங்கரா ரீதி திருச்சபை
செப் 26, 2011. பிறரன்பு நடவடிக்கைகளுக்கென 100 கோடி ரூபாய் திரட்ட உள்ளதாக இந்தியாவின்
சீரோ மலங்கரா ரீதி திருச்சபையின் உயர்மட்ட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மலங்கரா
ரீதி திருச்சபையை உயிர்துடிப்புடையதாகவும் ஆன்மீகப் பலமுடையதாகவும் மாற்ற இத்தீர்மானத்தை
உலகம் முழுவதிலிருந்தும் கலந்துகொண்ட 175 பிரதிநிதிகள் திருவனந்தபுரம் கூட்டத்தில் எடுத்துள்ளதாக
அறிவித்தார் மலங்கரா ரீதி திருச்சபையின் தலைவர் பேராயர் பசிலியோச் மார் கிளீமிஸ். மத
வேறுபாடுகளை நோக்காமல், வீடுகளற்ற அனைவருக்கும் குடியிருப்புகளை வழங்க தலத்திருச்சபை
திட்டமிட்டுள்ளது என்றார் அவர். விசுவாசிகளின் ஆன்மீகப் புதுப்பித்தலுக்கும் தேசத்தைக்
கட்டியெழுப்புவதில் உதவுவதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார் பேராயர் கிளீஈமிஸ். மக்கள்
எளிமையான வாழ்வை மேற்கொள்தல், மதுபானங்களுக்கு எதிரான மற்றும் வாழ்வுக்கு ஆதரவான விழிப்புணர்வு
நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவைகளும் இந்த உயர்மட்டக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 1930ல்
உருவான சீரோ மலங்கரா ரீதி திருச்சபை, உலக்ம் முழுவதும் ஐந்து இலட்சம் விசுவாசிகளைக் கொண்டு,
20 கல்லூரிகள், 525 பள்ளிகள் மற்றும் 18 மருத்துவமனைகளை நடத்தி வருகின்றது.