2011-09-26 16:40:52

திருத்தந்தையின் நான்கு நாள் திருப்பயணம் நிறைவுக்கு வந்தது


செப் 26, 2011. தன் தாய் நாடான ஜெர்மனியில் நான்கு நாட்கள் திருப்பயணத்தை நிறைவுச் செய்து இஞ்ஞாயிறு மாலை உரோம் நகருக்கு அருகேயுள்ள காஸ்தல் கந்தோல்ஃபோ கோடைவிடுமுறை இல்லம் வந்தடைந்தார் திருத்தந்தை.
ஜெர்மனியின் பெர்லின், எர்ஃபூர்ட் மற்றும் ஃப்ரைய்பூர்க் நகரங்களில் திருப்பயணத்தை மேற்கொண்ட திருத்தந்தை, அப்பகுதி கத்தோலிக்க விசுவாசிகளுடன் இணைந்து செபிப்பது தன் பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது என்றார்.
தன் தாய்நாட்டின் கிறிஸ்தவ வருங்காலம் குறித்து முழு நம்பிக்கையை இப்பயணத்தின்போது வெளியிட்ட திருத்தந்தை, விசுவாசப் பாதையை பின்பற்றி நடைபயிலத் தலத்திருச்சபைத் தலைவர்களுக்கு அழைப்பும் விடுத்தார்.
எங்கெங்கு கடவுள் குடியிருக்கிறாரோ அங்கெல்லாம் நம்பிக்கையும் உள்ளது, அந்த நம்பிக்கை, நமக்கு நிகழ்காலத்தையும் தாண்டிய ஓர் உதயத்தை திறந்து விடுகிறது எனவும் இத்திருப்பயணத்தின்போது ஜெர்மன் மக்களுக்கு எடுத்துரைத்தார் திருத்தந்தை.
இந்த நான்கு நாள் திருப்பயணத்தின்போது திருத்தந்தை, கத்தோலிக்க விசுவாசிகளை சந்தித்து அவர்களுக்கு திருப்பலி நிறைவேற்றியதுடன், ஜெர்மன் பாராளுமன்றத்தில் உரை வழங்கல், யூதர், இஸ்லாமியர், இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபையினர், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர் மற்றும் இளையோர் குழுவையும் வெவ்வேறு நேரத்தில் சந்தித்து உரை வழங்கல் ஆகிய நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார்







All the contents on this site are copyrighted ©.