2011-09-23 17:14:47

முன்னாள் போராளிகள் மற்றும் சந்தேக நபர்கள் 1,500 பேர் 30ம் தேதி விடுவிக்கப்படுவர்


செப் 23, 2011. புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 1500 முன்னாள் போராளிகள், விடுதலைப் புலிகள் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்டோர், இம்மாதம் 30ம் தேதி வவுனியா கலாòdசார மண்டபத்தில் வைத்து அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.அதன் பின்னர் புனர்வாழ்வு அளிக்கப்படும் எஞ்சிய முன்னாள் விடுதலைப்புலிச் சந்தேக நபர்களின் தொகை 1200 ஆகக் குறைவடையும் எனவும் அந்த அலுவலக உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வுப் பயிற்சி வழங்குமாறு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டவர்கள் மற்றும் புனர்வாழ்வுப் பயிற்சியைப் பூர்த்தி செய்யாதவர்கள் ஆகிய தரப்பினர் மேற்குறிப்பிட்ட தொகையில் அடங்குவர் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வுப் பயிற்சியை மேற்கொண்டு வரும் அனைவரும் இந்த ஆண்டு முடிவுக்குள் சமூகத்தில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை புனரமைப்பு அமைச்சகத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இயங்கி வரும் 7 புனர்வாழ்வு மையங்களில் புனர்வாழ்வு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதுடன் இந்த மையங்கள் விரைவில் ஐந்தாகக் குறைக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வன்னி இறுதிப் போரின் போது பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த 11,664 விடுதலைப் புலிகள் உறுப்பினர்களில் இதுவரை புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 8500 பேர் சமூகத்துடன் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.