தேர்தல்களைக் கண்காணிப்பதில் திருச்சபை தனது பங்கை ஆற்ற வேண்டும் - ஆப்ரிக்கத் திருச்சபை
பிரதிநிதிகள் வலியுறுத்தல்
செப்.20,2011. தேர்தல் காலங்களில் அதிக வன்முறைகள் இடம் பெறும் ஆப்ரிக்க நாடுகளில் அத்தேர்தல்களைக்
கண்காணிப்பதில் திருச்சபை தனது பங்கை ஆற்ற வேண்டுமென்று 20 ஆப்ரிக்க நாடுகளின் திருச்சபை
பிரதிநிதிகள் வலியுறுத்தினர். ஆப்ரிக்காவில், 2011ம் ஆண்டு முடிவதற்குள் 12 நாடுகளும்,
2012ம் ஆண்டில் 14 நாடுகளும் பொதுத் தேர்தல்கள் நடத்தத் திட்டமிட்டிருப்பதைச் சுட்டிக்
காட்டிய அப்பிரதிநிதிகள், ஆப்ரிக்காவில் தேர்தல்களின் போதும் அதற்குப் பின்னரும் வன்முறை
அல்லது கலவரங்கள் நடைபெறுவதற்கு மோசமான நிர்வாகமே காரணம் என்று குறை கூறினர். கத்தோலிக்க
நிவாரணப்பணி அமைப்பும், ஆப்ரிக்க மற்றும் மடகாஸ்கர் ஆயர் பேரவைகளும் இணைந்து நடத்திய
கருத்தரங்கில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர். சனநாயகக் கொள்கைகள்
மற்றும் நடைமுறைகளுக்கு ஆதரவளிக்கும் சீர்திருத்தங்களை அமல்படுத்த அரசியல் ரீதியாக விருப்பம்
காட்டப்படாமையும் இம்மோதல்களுக்குக் காரணம் என்றும் அக்கருத்தரங்கில் கூறப்பட்டது.