குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நடத்திய 3 நாள் உண்ணாவிரதம் வெளிப்பகட்டு - மனித உரிமை
ஆர்வலர்
செப்.20,2011. அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தி குஜராத் முதல்வர் நரேந்திர மோடி
நடத்திய 3 நாள் உண்ணாவிரதம் வெளிப்பகட்டுக்காக நடத்தப்பட்டது என்று அகமதபாத் மனித உரிமை
ஆர்வலர் இயேசு சபை அருள்தந்தை செத்ரிக் பிரகாஷ் கருத்து தெரிவித்தார். குஜராத்தில்
2002ம் ஆண்டில் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே இடம் பெற்ற மோதல்களில் மனித
உரிமைகள் மீறல்களில் நரேந்திரமோடி ஈடுபட்டிருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தார்
எனவும், இவர் உண்மையிலேயே நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப விரும்பினால் அக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு
நீதி வழங்கப்பட வேண்டுமெனவும் கிறிஸ்தவர் என்ற முறையில் தான் விரும்புவதாகக் தெரிவித்தார்
அருள்தந்தை செத்ரிக் பிரகாஷ். இப்படுகொலைக் கலவரம் நடந்து பத்தாண்டுகள் ஆகிய பின்னரும்
சிறுபான்மையினராகிய கிறிஸ்தவரும் முஸ்லீம்களும் ஓரங்கட்டப்படுகின்றனர் மற்றும் எல்லாத்
துறைகளிலும், குறிப்பாக கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பாகுபடுத்தப்படுகின்றனர் என்றும்
அவர் குறை கூறினார். இந்நிலையில் எந்த நல்லிணக்கம் பற்றி நாம் பேசுகிறோம் என்ற கேள்வியையும்
அவர் எழுப்பியுள்ளார்.