மியான்மாரில் இளம்பெண்கள் வியாபாரம் குறித்து தலத்திருச்சபை கவலை
செப்.16,2011. மியான்மாரின் ஷான் மாநிலத்தில் இளம்பெண்கள் பெருமளவில் வியாபாரம் செய்யப்படுவது
குறித்து தலத்திருச்சபை தனது கவலையை வெளியிட்டுள்ளது. மியான்மாரில் நடைபெற்ற இளையோர்
கருத்தரங்கில் பேசிய கருணா லாஷியோ சமூகநலப்பணி மைய இயக்குனர் அருட்பணி கிறிஸ்டோபர் ராஜ்,
இந்த மனித வியாபாரம் குறித்து இளையோருக்கு விழிப்புணர்வு கொடுத்து வருவதாகத் தெரிவித்தார். “2011ம்
ஆண்டில் மனித வியாபாரம்” என்ற தலைப்பில் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு வெளியிட்ட அறிக்கையில்,
இந்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மூன்று முக்கிய நாடுகளில் மியான்மாரும் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளது. உலகில்
ஒவ்வோர் ஆண்டும் சுமார் 30 இலட்சம் பேர் இந்த வியாபாரத்திற்குப் பலிகடா ஆகின்றனர். இந்த
வியாபாராம் ஆண்டுக்கு மூவாயிரம் கோடிக்கு மேற்பட்ட டாலர் பணத்தை ஈட்டுகின்றது என்று பேராயர்
தொமாசி ஐ.நா.கூட்டமொன்றில் இப்புதனன்று கூறினார்.