செப்.16,2011. காஸ்தெல் கந்தோல்ஃபோவிலுள்ள பாப்பிறைகளின் இல்லத்தில் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எழுதிய புத்தகங்கள் அடங்கிய கண்காட்சியை அவர் பார்வையிட்டு
வியப்படைந்தார் என வத்திக்கான் அதிகாரிகள் கூறினர். திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பாப்பிறைப்
பணிக்கு வருவதற்கு முன்னும் அப்பணியின் போதும் அவர் எழுதிய பல புத்தகங்களும், அவற்றின்
பல மொழிபெயர்ப்புப் பதிப்புக்களும் அடங்கிய சுமார் 600 புத்தகங்கள் இந்தக் கண்காட்சியில்
வைக்கப்பட்டிருக்கின்றன. வருகிற வியாழனன்று திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும் ஜெர்மன்
நாட்டுத் திருப்பயணத்தையொட்டி இக்கண்காட்சி வத்திக்கானில் இவ்வெள்ளியன்று சுற்றுலாப்
பயணிகளுக்கெனத் திறந்து வைக்கப்பட்டது. மேலும், செப்டம்பர் 24ம் தேதி ஜெர்மனியின் Freiburg
நகரில் இப்புத்தக கண்காட்சி திறந்து வைக்கப்படும். வத்திக்கான் பதிப்பகமும், ஜெர்மன்
புத்தக வெளியீட்டாளரான Herder ம் இணைந்து இக்கண்காட்சியை நடத்துகின்றனர். இதனைப்
பார்வையிட்ட திருத்தந்தை, இந்தப் புத்தகங்களிலுள்ள வார்த்தைகள், மக்கள் தங்கள் வாழ்க்கைப்
பாதைகளைக் கண்டு கொள்ள உதவும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார்.