பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் பரவிவரும் டெங்கு காய்ச்சலால் தலத்திருச்சபை பாதிப்பு
செப்.15,2011. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் பரவிவரும் டெங்கு காய்ச்சலால் தலத்திருச்சபை
பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களாய் அங்கு நிலவி வரும் இந்தக் காய்ச்சலால்
இதுவரை 5000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் இரண்டு கிறிஸ்தவர்கள் உட்பட
18 பேர் இறந்துள்ளனர் என்றும் செய்திகள் கூறுகின்றன. இந்த காய்ச்சல் பரவுவதைக் கட்டுப்படுத்த
பஞ்சாப் மாநில அரசு, லாகூர் நகரில் தலத்திருச்சபை நடத்தும் பல பள்ளிகள் உட்பட அனைத்து
பள்ளிகளையும் இச்செவ்வாய் முதல் பத்து நாட்களுக்கு மூடி, பள்ளிகளில் கொசு ஒழிப்பு மருந்துகளை
பயன்படுத்தி வருகின்றது. இந்தக் காய்ச்சலுக்கு எதிராக மக்கள் கடைபிடிக்க வேண்டிய பல
பாதுகாப்பு முயற்சிகளைப் பற்றி லாகூர் மறைமாவட்ட முதன்மை குரு Andrew Nisari புனித அந்தோனியார்
நவநாள் பக்தி முயற்சிகளுக்குப் பின் மக்களுக்கு எடுத்துரைத்தார். பல குருக்கள் கோவில்களில்,
திருப்பலி நேரங்களில் டெங்கு காய்ச்சலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிகளை
மக்களுக்குக் கூறி வருகின்றனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.