அர்ஜெண்டினாவில் இரயில் விபத்தில் இறந்தவர்களுக்குத் திருத்தந்தை அனுப்பிய அனுதாபத்
தந்தி
செப்.15,2011. இச்செவ்வாய் காலை அர்ஜெண்டினாவின் Buenos Airesல் நிகழ்ந்த இரயில் விபத்தில்
இறந்தவர்கள், மற்றும் காயமடைந்தோருக்குத் தன் ஆழ்ந்த அனுதாபங்களைத் திருத்தந்தை தெரிவித்தார். இச்செவ்வாய்
காலை Buenos Aires நகரில் இரயில் அடைப்பைத் தாண்டிச் செல்ல முயன்ற ஒரு பேருந்தினால்,
இரு இரயில்கள் மற்றும் அந்தப் பேருந்து விபத்துக்குள்ளாகி 11 பேர் இறந்துள்ளனர், மற்றும்
200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தைக் குறித்து கேள்விபட்டத் திருத்தந்தை,
திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே வழியாக அர்ஜென்டினா கத்தோலிக்க ஆயர்
பேரவையின் தலைவர் கர்தினால் Jorge Bergoglioவுக்குத் தன் அனுதாபங்களைத் தெரிவிக்கும்
தந்தியொன்றை அனுப்பியுள்ளார். விபத்தில் இறந்தவர்களுக்கு இறைவன் நித்திய சாந்தி அருளவேண்டும்
என்றும், காயப்பட்டவர்களுக்கு குணமும், ஆறுதலும் வழங்க வேண்டும் என்றும் இச்செய்தியில்
கூறியுள்ள திருத்தந்தை, பாதிக்கப்பட்ட அனைவரோடும் தானும் செபத்தால் ஒன்றியிருப்பதாக இத்தந்தியில்
தெரிவித்துள்ளார்.