ஒரிஸ்ஸாவைச் சூழ்ந்துள்ள வெள்ளம் குறித்து கட்டக்-புபனேஸ்வர் சமூகப்பணிக் குழுவின்
இயக்குனர்
செப்.14,2011. ஒரிஸ்ஸாவைச் சூழ்ந்துள்ள வெள்ளம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதென்றும்,
பொருளுதவி செய்யக்கூடிய அனைத்து நிறுவனங்களுக்கும் வேண்டுகோள்கள் அனுப்பியுள்ளோம் என்றும்
கட்டக்-புபனேஸ்வர் உயர்மறைமாவட்டத்தின் சமூகப்பணிக் குழுவின் இயக்குனர் அருள்தந்தை குமார்
நாயக் கூறினார். அம்மாநிலத்தின் 30 மாவட்டங்களில் 19 மாவட்டங்களுக்கும் மேல் வெள்ளத்தால்
பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், மக்களின் மிக முக்கியத் தேவை நல்ல குடிநீர் என்றும்
அருள்தந்தை நாயக் எடுத்துரைத்தார். மக்களுக்குத் தேவையான மருந்துகளை உடனடியாக அனுப்பி
வைக்குமாறு ஒரிஸ்ஸாவின் கத்தோலிக்க இடர்துடைப்புச் சேவையின் ஒருங்கிணைப்பாளர் Amrut Prusty
பல அரசு சாரா அமைப்புக்களுக்கு விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்தார்.
கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக பெய்த மழையால் ஒரிஸ்ஸாவின் பல நதிகளில் வெள்ளம்
பெருக்கெடுத்துள்ளது என்றும், இந்த வெள்ளத்தில் 30க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர்,
மற்றும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.