செப்.14,2011. தமிழகத்தின் பல வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, அரசு வேலைக்காகக்
காத்திருப்போரின் எண்ணிக்கை 68 லட்சத்து 5 ஆயிரம் பேர் என்று வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்
துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளக்கக் குறிப்பில்,
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தல், புதுப்பித்தல், பதிவு அடையாள அட்டை வழங்குதல்,
உள்ளிட்ட முக்கியப் பணிகள் அனைத்தும் கம்ப்யூட்டர் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகத்திலுள்ள
37 வேலைவாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. 2010ம் ஆண்டில்
11 லட்சத்து 54 ஆயிரத்து 121 பேர் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.
நடப்பு ஆண்டு, மார்ச் நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின்
எண்ணிக்கை 68,05,248. நடப்பாண்டு பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள்
தாங்கள் படித்த பள்ளிகளின் மூலமாகவே வேலைவாய்ப்பு பதிவினை ஆன்-லைன் வசதியைப் பயன்படுத்தி
இணையதளத்தில் பதிந்து கொண்டனர். இத்தகைய முறையால் பிளஸ் 2 மாணவர்கள் 4,78,717 பேரும்,
10ம் வகுப்பு மாணவர்கள் 7 லட்சத்து 2 ஆயிரத்து 962 பேரும் தங்களது பதிவினை ஆன்-லைன் மூலம்
செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.