மெக்சிகோ நாட்டில் பெருகியுள்ள வன்முறைகள் குறைந்து மனிதம் மீண்டும் வாழும் - கர்தினால்
Norberto Rivera Carrera
செப்.13,2011. மெக்சிகோ நாட்டில் பெருகியுள்ள வன்முறைகள் குறைந்து மனிதம் மீண்டும் இந்த
நாட்டில் வாழும் என்றும், மக்கள் நம்பிக்கை குறையாமல் இருக்க வேண்டும் என்றும் மெக்சிகோ
உயர்மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால் Norberto Rivera Carrera கூறினார். ஆகஸ்ட்
மாத இறுதியில் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட Monterrey நகரில் மெக்சிகோ கத்தோலிக்க ஆயர்
பேரவையின் ஆண்டுக் கூட்டம் நடைபெறுவதாக ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. அந்நகரில்
வன்முறைகள் இருந்தாலும், ஆயர்கள் கூட்டம் வேறு இடத்திற்கு மாற்றப்படக் கூடாது என்று மெக்சிகோ
ஆயர்கள் கூறியதால், கூட்டம் அந்நகரிலேயே திட்டமிட்டபடி நடைபெற்றது என்று கர்தினால் Carrera
செய்தியாளர்களிடம் கூறினார். வன்முறைகளைச் சந்தித்துள்ள இந்நகரில் வாழ்பவர்களும்,
இன்னும் மெக்சிகோ நாட்டில் வாழும் அனைவரும் நம்பிக்கை இழக்காமல் வாழும்படி அனைத்து ஆயர்களும்
விரும்புகின்றனர், அதையே ஆசிக்கின்றனர் என்று ஆயர்கள் சார்பில் பேசிய கர்தினால் Carrera
வலியுறுத்திக் கூறினார்.