2011-09-13 15:05:49

மியூனிக் நகரில் நடைபெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு மாநாட்டிற்கு திருத்தந்தை அனுப்பிய செய்தி


செப்.13,2011. பகிர்ந்து வாழும் வாழ்வு என்பது இதுவரை மதம் என்ற ஒரு வரையறைக்குள் மட்டுமே அதிகமாய் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. நாம் வாழும் இக்காலத்தில் அந்த எல்லையையும் கடந்து, மனிதகுலம் முழுவதுமே பகிர்ந்து வாழ வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இஞ்ஞாயிறு முதல் செவ்வாய் வரை ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடைபெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு மாநாட்டிற்கு திருத்தந்தை அனுப்பிய ஒரு செய்தியில், அனைத்து கிறிஸ்தவக் குழுக்களும் திறந்த மனதோடும், ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தோடும் வாழும்படி அழைப்பு விடுத்துள்ளார்.
25 ஆண்டுகளுக்கு முன் அருளாளர் இரண்டாம் ஜான் பால் இத்தாலியின் அசிசி நகரில் உலகின் பல மதத் தலைவர்களுக்கென ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து Sant Egidio என்ற அமைப்பு ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்தவ ஒன்றிப்பு கூட்டங்களை நடத்தி வருகின்றது.
Sant Egidio அமைப்பும், Munich Freising உயர்மறைமாவட்டமும் இணைந்து கடந்த மூன்று நாட்கள் மியூனிக் நகரில், 'சேர்ந்து வாழ கடமைப் பட்டுள்ளோம். மதங்களுக்கும், கலாச்சாரங்களுக்கும் இடையே உரையாடல்' என்ற தலைப்பில் மாநாட்டை நடத்தி வந்தன.
ஒப்புரவையும், புரிந்து கொள்ளுதலையும் வளர்க்க நடத்தப்படும் இந்தக் கூட்டங்கள் உலகில் இன்னும் புரிந்து கொள்ளுதலும், பகிரும் வாழ்வும் வளர்வதற்குரிய வழிகளைத் தேட வேண்டும் என்று திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.