திருநற்கருணை தேசிய மாநாட்டின் நிறைவுத் திருப்பலியில் திருத்தந்தை வழங்கிய மறையுரை
செப்.12,2011. திருநற்கருணை முன் பணிந்து கிறிஸ்துவைத் திருவிருந்தில் ஏற்றுக்கொள்ளும்
ஒவ்வொருவரும் அயலவரின் தேவைகளைப் புரிந்துகொண்டு, அவர்களுடன் தங்கள் உடமைகளைப் பகிர்ந்து
வாழ தயாராக இருக்க வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார். இத்தாலியில்
அன்கொனா நகரில் கடந்த ஒரு வாரமாகக் கொண்டாடப்பட்ட 25வது திருநற்கருணை தேசிய மாநாட்டின்
நிறைவுத் திருப்பலியை இஞ்ஞாயிறன்று நிகழ்த்தி மறையுரை வழங்கிய திருத்தந்தை இவ்வாறு கூறினார். இன்றைய
உலகில் பெருமளவு வளர்ந்து வரும் சுயநலம், தற்பெருமை ஆகிய குறைகளுக்கு ஒரு மாற்று மருந்தாக
திருநற்கருணையைச் சார்ந்துள்ள ஆன்மீகம் விளங்குகிறது என்று திருத்தந்தை சுட்டிக் காட்டினார். திருநற்கருணைக்கு
முன் தாழ்மையோடு மண்டியிடும் எவரும் அடுத்தவரின் தேவைகளைக் கவனியாது இருக்க முடியாது
என்றும், அடுத்தவரின் பசி, தாகம், ஆடையின்மை, உடல்நலக் குறைவு ஆகிய பல்வேறு தேவைகளைத்
தீர்க்காமல் போகமாட்டார்கள் என்றும் தன் மறையுரையில் வலியுறுத்தினார் திருத்தந்தை. திருச்சபை
என்ற குடும்பத்தின் இதயத்துடிப்பாக விளங்கும் திருநற்கருணை ஆன்மீகம், பிளவுகளையெல்லாம்
மேற்கொள்ளும் ஒரு சிறந்த வழி என்று கூறியத் திருத்தந்தை, சமுதாயத்தில் மிகவும் நலிந்தோரை
மீண்டும் மனித குலத்தின் மையத்திற்குக் கொண்டுவரும் வலிமைபெற்றது இந்த ஆன்மீகம் என்றும்
கூறினார். அன்கொனா நகரில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக கூடியிருந்த மக்களுக்கு திறந்தவெளியரங்கில்
திருப்பலியையும் ஞாயிறு மூவேளை செப உரையையும் வழங்கியத் திருத்தந்தை ஞாயிறு மாலை மீண்டும்
வத்திக்கான் திரும்பினார்.