2011-09-12 15:58:02

இந்தோனேசியாவில் நடைபெறவிருக்கும் அகிலஉலக கருத்தரங்கிற்கு திருத்தந்தையை அழைக்கும் ஆவலில் இந்தோனேசிய இஸ்லாமிய மாணவர் குழு


செப்.12,2011. மதங்களுக்கிடையே நடைபெறவேண்டிய உரையாடல் மற்றும் அமைதி ஆகிய கருத்துக்களை மையமாகக் கொண்டு இந்தோனேசியாவில் 2012ம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஓர் அகில உலக கருத்தரங்கிற்கு திருத்தந்தையை அழைக்கும் ஆவலில் வத்திக்கான் வந்திருந்த இந்தோனேசிய மாணவர் குழுவொன்றை வத்திக்கான் அதிகாரி ஒருவர் சந்தித்தார்.
HMI என்று இந்தோனேசிய மொழியில் அழைக்கப்படும் இந்தோனேசிய இஸ்லாமிய மாணவர்கள் என்ற அமைப்பின் பிரதிநிதிகள் வர்த்தகக் கோபுரங்கள் தாக்கப்பட்டதன் பத்தாம் ஆண்டு நினைவு நேரத்தில் வத்திக்கான் வந்திருந்தனர். அப்போது, பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Jean Louis Tauran ஐச் சந்தித்தனர்.
பத்து ஆண்டுகளுக்கு முன் வர்த்தகக் கோபுரங்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்க அரசு ஆப்கானிஸ்தானில் மேற்கொண்ட இராணுவத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்த இந்த மாணவர் அமைப்பு, தற்போது உலக அமைதிக்கென உழைத்து வருகிறது.
அடிப்படை வாதங்களையும், வன்முறை வழிகளையும் உலகிலிருந்து அகற்ற உழைத்து வரும் கிறிஸ்தவ மற்றும் பிற மத அமைப்புக்களின் முயற்சிகளை இந்த மாணவர் அமைப்பு தற்போது பெரிதும் ஆதரித்து வருகிறது. தங்கள் முயற்சிகளுக்கு இந்தோனேசியத் தலத்திருச்சபையும், வத்திக்கானும் ஆதரவு தரவேண்டும் என்று இவ்வமைப்பினர் கோரி வருகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.