மியான்மாரிலுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட ஐ.நா.பொதுச்செயலர் வலியுறுத்தல்
செப்.09,2011. மியான்மாரில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் உட்பட அந்நாட்டில்
அண்மையில் தொடங்கப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் ஊக்கமளிக்கக்கூடியதாய் இருந்தாலும், இரண்டாயிரத்துக்கும்
அதிகமான அரசியல் கைதிகள் இன்னும் அந்நாட்டுச் சிறைகளில் இருப்பது குறித்து எச்சரித்துள்ளார்
ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன். கடந்த நவம்பரில் நடைபெற்ற போலித்தனமான தேர்தலைத்
தொடர்ந்து அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சு கி விடுதலை செய்யப்பட்டது,
நாடு முன்னேற்றப் பாதையைத் தொடங்குவதற்கு வாய்ப்பை வழங்கியுள்ளது என்று இவ்வியாழனன்று
வெளியான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் பான் கி மூன். மியான்மாரில் அறிவிக்கப்பட்டுள்ள
சீர்திருத்தங்கள் உடனடியாக அமல்படுத்தப்படுமாறு வலியுறுத்தியுள்ளார் பான் கி மூன்.