கடன் சுமையில் தவிக்கும் 50 விழுக்காட்டு விவசாயிகள்
செப் 06, 2011. "இந்தியாவில் 50 விழுக்காட்டு விவசாயிகள் கடன் சுமையில் மூழ்கியுள்ளனர்'
என மத்திய அமைச்சர் சரத் பவார் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும், ஒன்பது கோடி விவசாயிகள்
கடன் சுமையில் தத்தளிப்பதாகத் தெரிவிக்கும் தேசிய ஆய்வு, ஆந்திராவில் அதிக பட்சமாக 49
லட்சம் பேர், அதாவது 82 விழுக்காட்டினரும், தமிழகத்தில் 74 விழுக்காட்டினரும், பஞ்சாபில்
65 விழுக்காட்டினரும், மகாராஷ்டிராவில் 54 விழுக்காட்டினரும் கடனாளிகளாக இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளதை,
சரத் பவார் பாராளுமன்றத்தில் எடுத்துரைத்தார். விவசாயிகளைக் கடன் சுமையிலிருந்து மீட்க,
அவர்களது கடனைத் தள்ளுபடி செய்யும் திட்டம், 2008ல் அறிமுகப்படுத்தப்பட்டு, இந்தத் திட்டத்தின்
கீழ், மூன்று கோடியே 69 இலட்சம் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்காக
மத்திய அரசு 65 ஆயிரத்து 318 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது என்ற அமைச்சர், கடன் தந்த நிறுவனங்களுக்காக
மத்திய அரசு 51 ஆயிரத்து 340 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது எனவும் தெரிவித்தார்.