2011-08-31 15:41:04

திருத்தந்தை பிரித்தானிய அரசில் மேற்கொண்ட பயணத்தின் முதல் ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள்


ஆக.31,2011. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட திருப்பயணத்தின் முதல் ஆண்டு நிறைவு நெருங்கி வருவதையொட்டி, அப்பயணத்தின் நல்ல நினைவுகளை கொண்டாட வேண்டுமென Westminster பேராயர் வின்சென்ட் நிக்கோல்ஸ் கூறினார்.
2010ம் ஆண்டு செப்டம்பர் 16 முதல் 19 வரை திருத்தந்தை பிரித்தானிய அரசில் மேற்கொண்ட பயணத்தின் முதல் ஆண்டு நிறைவை 'பாப்பிறை பெனடிக்ட் கொண்டாட்டங்கள்' என்று நினைவுகூரும்படி பேராயர் நிக்கோல்ஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இத்துடன், செப்டம்பர் 18 ஞாயிறன்று, இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து தலத்திருச்சபை Home Mission Sunday அதாவது, உள்நாட்டில் மறைபரப்புப் பணி ஞாயிறை சிறப்பிக்கவிருக்கிறது.
“நாம் பயணம் செய்யும் பாய்மரங்களில் புதியக்காற்று” என்ற கருத்து இந்த ஞாயிறுக்கென குறிக்கப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக் காட்டிய பேராயர் நிக்கோல்ஸ், திருத்தந்தை சென்ற ஆண்டு பிரித்தானிய அரசில் மேற்கொண்ட திருப்பயணம் தலத்திருச்சபையின் பயணத்தில் புதிய காற்றைக் கொண்டு வந்ததென்று குறிப்பிட்டார்.








All the contents on this site are copyrighted ©.