பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் உயரவையில் அந்நாட்டின் சிறுபான்மையினருக்கென நான்கு இடங்கள்
ஒதுக்கப்படும்
ஆக.30,2011. பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் உயரவையில் அந்நாட்டின் சிறுபான்மையினருக்கென
நான்கு இடங்கள் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர் அல்லாத சிறுபான்மையினர்
உயர் அவையில் இடம் பெறுவது அந்நாட்டின் வரலாற்றில் இதுவே முதல் முறை. இந்த முடிவு வரும்
ஆண்டு மார்ச் மாதம் உயரவைக்கு நடக்கவிருக்கும் தேர்தல்களின்போது கடைபிடிக்கப்படும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்கச் சிறுபான்மையினர் அமைச்சராகப் பணி புரிந்து, கொலை
செய்யப்பட்ட Shahbaz Bhatti உட்பட பல பாகிஸ்தான் தலைவர்கள், இந்நாட்டுச் சமுதாயத்தின்
விளிம்புகளில் வாழ்வோருக்கெனப் போராடி வந்ததன் பலன் சிறிது சிறிதாக வெளிவருகிறதென்று
பாகிஸ்தான் சிறுபான்மையினர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் Anjum James Paul, அரசுத் தலைவருக்கு
நன்றி தெரிவித்து எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு
அரசியல் மற்றும் பொது வாழ்வில் அதிக இடங்கள் தரப்பட வேண்டுமென்றும், சிறுபான்மையினர்
சுதந்திரத்தைப் பாதிக்கும் சட்டங்கள் நாட்டிலிருந்து அறவே ஒழிக்கப்பட வேண்டுமென்றும்
இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.