கத்தோலிக்கர், தாய்மையின் பொருளை மீண்டும் கண்டுணர வேண்டும் – வத்திக்கான் அதிகாரி
ஆக.26,2011. தாய்மை என்பது கடவுளிடமிருந்து கொடையாகப் பெறப்படுவதால் அதன் அர்த்தம் மீண்டும்
கண்டுணரப்பட வேண்டும் என்று திருப்பீட வாழ்வுக் கழகத் தலைவர் பேராயர் Ignacio Carrasco
de Paula அழைப்பு விடுத்துள்ளார். தாய்மைப் பேற்றை அடையும் செய்தி மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக
இருக்க வேண்டும், “வாழ்த்துக்கள்” சொல்வதற்கு இட்டுச் செல்ல வேண்டுமெனப் பேராயர் Carrasco
மேலும் கூறினார். அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால், மனித வாழ்வைப் பாதுகாப்பதற்கென
25 ஆண்டுகளுக்கு முன்னர் இத்திருப்பீட வாழ்வுக் கழகத்தை ஆரம்பித்தார் என்று சி.என்.எ
செய்தி நிறுவனத்திடம் கூறிய பேராயர், இத்திருப்பீட அவையின் இவ்வாண்டுச் செயல்திட்டங்களையும்
விளக்கினார். கருக்கலைப்பு செய்து கொண்ட பெண்கள் எதிர்நோக்கும் உளவியல் சார்ந்த பிரச்சனைகள்,
கருவுற இயலாதவர்களுக்கானச் சிகிச்சைகள், தொப்புள்கொடி வங்கிகள் போன்ற விவகாரங்கள் இவ்வாண்டில்
மிகுந்த கவனம் செலுத்தப்படுகின்றன என்று பேராயர் கூறினார்.