உலக இளையோர் நாளின் இறுதியில் திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரை
ஆக.21,2011. அன்பு நண்பர்களே, இதோ நீங்கள் வீடு திரும்பும் நேரம் வந்துவிட்டது. இந்த
அற்புதமான அனுபவத்திலிருந்து நீங்கள் திரும்பிச் செல்லும்போது, உங்கள் நண்பர்கள் உங்களிடம்
என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளதென்று அறிய ஆவலாய் இருப்பார்கள். நீங்கள் அடைந்துள்ள புத்துணர்வை,
கிறிஸ்துவின் மீது ஆழப்பட்டுள்ள உங்கள் நட்பை எடுத்துக் கூற தயங்க வேண்டாம். உங்களுடன்
பயணம் செய்ய இயலாமல், உங்கள் வரவுக்காகக் காத்திருக்கும் உங்கள் நண்பர்களை இந்த நாட்களில்
நான் அடிக்கடி நினைவு கூர்ந்தேன். உங்கள் நண்பர்களுக்கும், அவர்கள் குடும்பங்களுக்கும்
என் அன்பு வாழ்த்துக்களைச் சுமந்து செல்லுங்கள். அதேபோல், உலகில் பல்வேறு பிரச்சனைகளில்
சிக்குண்டிருக்கும் இளையோருக்கும் என் அன்பைச் சுமந்து செல்லுங்கள் என்று கூறிய திருத்தந்தை,
உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களில் பங்கேற்ற இளையோருக்கு உறுதுணையாக இருந்த ஆயர்கள்,
குருக்கள் அனைவருக்கும் தன் நன்றியைத் தெரிவித்தார். மூவேளை செபத்தின் இறுதியில்,
2013ம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோவில் அடுத்த உலக இளையோர் நாள் நடைபெறும்
என்பதை அறிவித்தத் திருத்தந்தை, மீண்டும் ஒரு முறை கூடியிருந்த அனைவருக்கும் ஸ்பானியம்,
பிரெஞ்ச், ஆங்கிலம், ஜெர்மன், இத்தாலியம், போர்த்துகீஸ், போலந்து ஆகிய மொழிகளில் வாழ்த்துக்களைக்
கூறினார்.