ஆங்கிலேயக் கிழக்கிந்திய நிறுவனம் நாயக்கர்களிடம் இருந்து 1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி
வங்கக் கடற்கரையோரமாய் ஒரு நிலப்பகுதியை வாங்கியதாக வரலாறு சொல்கிறது. சென்னை மாநகரம்
என்று நாம் இன்று பெருமைப்படும் மெட்ராஸ் ஆகஸ்ட் 22 உருவாக ஆரம்பித்தது. நகரங்கள் உருவாவதை,
நாகரீகத்தின் ஓர் அளவுகோலென நாம் பார்க்கிறோம். சென்னை என்ற பெருநகர் நோக்கி, அதேபோல்,
மும்பை, கொல்கத்தா, புது டில்லி என்ற எல்லா பெருநகரங்கள் நோக்கியும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில்
மக்கள் வந்து சேருகின்றனர். நகரங்கள் தங்களை வாழவைக்கும் என்ற நம்பிக்கையில் வந்து
சேரும் மக்கள் இவர்கள். இப்படி வரும் மக்களில் தங்கள் வாழ்வைத் தேடிக் கண்டவர்களும் உண்டு.
வாழ்வைத் தொலைத்தவர்களும் உண்டு. நகரம், நரகம் என்ற இரு வார்த்தைகளில் வெறும் எழுத்துக்கள்
மட்டும் இடம் மாறி விட்டனவா, அல்லது, நகரமே நரகமாய் மாறி வருகின்றதா? எந்த ஒரு நகரமும்
தானாகவே நரகமாவதில்லை. அங்கு வாழும் நாம்தான் நகரத்தை நரகமாக்கி வருகிறோம். இதை நாகரீகம்
என்று சொல்லி, பெருமைப்படுபவர்களும் இருக்கிறார்கள். ஆகஸ்ட் 22 சென்னை மாநகரம் உருவாக
ஆரம்பித்தது என்று சொல்லும்போது, இந்த எண்ணங்களும் மனதில் உருவாகின்றன.