நேபாளம் மதச்சுதந்திரம் பெற்றதிலிருந்து அங்குள்ள கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை வளர்ந்து
வருகிறது
ஆக.17,2011. அனைவரும் அன்னை மரியாவைப் போல விசுவாசத்தில் வளர்ந்து, இயேசுவின் உண்மையான
சீடர்களாக வாழ வேண்டும் என்று காத்மாண்டு ஆயர் Anthony Sharma கூறினார். இத்திங்கள்
கொண்டாடப்பட்ட அன்னை மரியாவின் விண்ணேற்புத் திருநாள் அன்று 30 குழந்தைகளுக்கும், சிறுவர்,
சிறுமியருக்கும் திருமுழுக்கு, திருநற்கருணை ஆகிய அருட்சாதனங்களை வழங்கிய ஆயர் Sharma,
அவர்கள் அனைவரும் விசுவாசத்தில் வளர வேண்டுமென வலியுறுத்தினார். 2006ம் ஆண்டு நேபாளம்
மதச்சுதந்திரம் பெற்றதிலிருந்து அங்குள்ள கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை வளர்ந்து வருகிறது
என்றும், தற்போது அந்நாட்டில் 2000000க்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் உள்ளனர் என்றும் ஆசிய
செய்தி நிறுவனம் கூறுகிறது. 9000 பேரைக் கொண்ட கத்தோலிக்கத் திருச்சபை 31 கல்வி நிறுவனங்கள்
வழியே அந்நாட்டில் பணிகள் செய்து வருகின்றது என்றும், தற்போது நேபாளத்தில் 65 குருக்களும்
160 துறவியரும் பணி செய்து வருகின்றனர் என்றும் இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.