உண்மை அன்பை நோக்கி வர அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர் போலந்து மற்றும் ஜெர்மன்
ஆயர்கள்.
ஆக 16, 2011. அன்பு ஒன்றே படைப்புத்திறன் கொண்டதால் அந்த உண்மை அன்பை நோக்கி அனைவரும்
வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் போலந்து மற்றும் ஜெர்மன் ஆயர்கள். புனித மாக்ஸிமில்லியன்
மரிய கோல்பே மறைசாட்சியாய் உயிரிழந்ததன் 70ம் ஆண்டை சிறப்பிக்கும் விதமாக போலந்தின் ஆஷ்விட்சில்
கூடிய இவ்விரு நாட்டு ஆயர்களும், பிறருக்காக தன்னையே கையளிக்கும் அன்பின் மகத்துவம் குறித்து
எடுத்துரைத்தனர். நம் இதயங்கள் அன்பால் ஆளப்படும்போது உலகில் அமைதி நிலவும் என உரைத்த
ஆயர்கள், உலகம் முழுவதும் உள்ள நல்மனம் கொண்ட மக்கள் அனைவரும் இறைவனை நோக்கி திரும்பி
வரவேண்டும் என இறைஞ்சுவதாகவும் தெரிவித்தனர். கடவுள் வாழ்கிறார், அவர் நம்மை தொடர்ந்து
அன்பு கூர்கிறார் என்பதை தன் சாட்சிய நடவடிக்கை மூலம் வெளிப்படுத்திய தூய மாக்ஸிமில்லியன்
மரிய கோல்பேயின் வாழ்வு நம்மில் அன்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் எனவும்
எடுத்துரைத்தனர் ஆயர்கள்.