அடுத்த உலக இளையோர் தினக் கொண்டாட்டம் 2013ம் ஆண்டு பிரசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோவில்
ஆக 16, 2011. அடுத்த உலக இளையோர் தினக் கொண்டாட்டங்கள் 2013ம் ஆண்டு பிரசில் நாட்டின்
ரியோ டி ஜெனீரோ நகரில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாரம் இஸ்பெயினின்
மத்ரித்தில் இடம்பெறும் உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களின் போது, அடுத்த கொண்டாட்டங்களுக்கான
இடம் குறித்து திருத்தந்தை அறிவிப்பார் என எதிர்பார்த்திருந்த வேளையில், இதனை முன்னதாகவே
அறிவித்துள்ளது திருப்பீடம். 2013ல் உலக இளையோர் தினம் சிறப்பிக்கப்பட உள்ள ரியோ டி
ஜெனீரோவின் ஆளுனரும் அந்நகரின் மேயரும் தற்போதைய மத்ரித் கொண்டாட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.
இவர்களுடன் பிரசில் நாட்டிலிருந்து 14,000 இளையோரும் வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே,
மத்ரித் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள உலகின் 137 நாடுகளிலிருந்து பதிவு செய்துள்ள நான்கு
இலட்சத்து எண்பதாயிரம் மாணவர்களின் சராசரி வயது 22 என தெரிவிக்கப்பட்டுள்ளது.