ஆக.11,2011. தமிழகத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக, பல்வேறு காரணங்களுக்காக தங்கள் உயிரை மாய்த்து
கொள்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இதில், தலைநகரான சென்னை முதலிடத்தில்
இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் தோல்வி, கணவனுடன் தகராறு, காதல் விவகாரம்,
கடன் தொல்லை, விரக்தி, வாழ்க்கையில் வெறுப்பு போன்ற காரணங்களாலும், மனதளவில் தைரியத்தை
தொலைத்தவர்கள், மனக்குழப்பத்தில் இருப்பதுடன், தனிமையில் இருப்பவர்கள் போனறவர்களாலும்
தற்கொலை முடிவுகள் எடுக்கப்படுவதாக மனோதத்துவ மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக,
தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையில், இலகுவான மனம் படைத்த பெண்கள் தான் அதிகம்
என்று அனைவரும் நினைத்திருக்கும் வேளையில், பெண்களை விட, ஆண்கள் இரண்டு மடங்கு பேர் தங்கள்
உயிரை மாய்த்துக் கொள்கின்றனர் என்பது வழக்குப் பதிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த
2010ம் ஆண்டில் மட்டும், 10 ஆயிரத்து 552 ஆண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால்,
அதே ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட பெண்களின் எண்ணிக்கை, 6,009 பேர் மட்டுமே. கடந்த பல
ஆண்டுகளாக இதே நிலையே நீடித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.