2011-08-10 15:22:53

சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள சலுகைகள் கிறிஸ்தவர்களுக்குக் கிடைப்பதில்லை - மத்தியப் பிரதேச ஆயர்கள் புகார்


ஆக.10,2011. சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள பல சலுகைகள் கிறிஸ்தவர்களுக்குக் கிடைப்பதில்லை என்று மத்தியப் பிரதேச ஆயர்கள் மாநில அரசிடம் புகார் கூறியுள்ளனர்.
சிறுபான்மையினருக்கென ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களில் கிறிஸ்தவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை என்றும், இன்னும் பிற சலுகைகளும் கிறிஸ்தவர்களுக்கு மறுக்கப்பட்டு வருவதாகவும் தலத் திருச்சபை ஆயர்கள் புகார் அளித்துள்ளனர்.
மத்தியப் பிரதேசத் தலத் திருச்சபை மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து அண்மையில் போபாலில் நடைபெற்ற ஆயர்கள் கூட்டத்தின் இறுதியில் இந்தப் புகாரை போபால் பேராயர் லியோ கொர்னேலியோ அரசிடம் அளித்தார்.
பள்ளிக் குழந்தைகளின் சீருடையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள், மற்றும் பள்ளிகளில் சொல்ல வேண்டிய சூரிய வழிபாடு போன்ற விதிகளை நடைமுறைப்படுத்த மிகுந்த ஆர்வம் காட்டும் மாநில அரசு, பள்ளிகளில் தரமான கல்வியை கொண்டு வர ஆர்வம் காட்டுவது மிகுந்த பயனளிக்கும் என்று ஆயர்களின் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.