இலங்கை அரசு பெற்றிருப்பது போரின் வெற்றியேயன்றி, அமைதியல்ல
ஆக.09,2011. இலங்கை அரசு போரை வென்றிருக்கலாம் ஆனால் அமைதியை அல்ல என்பது மட்டுமல்ல,
அது கடந்த காலங்களிலிருந்து கற்றுக்கொள்ளத் தவறியுள்ளது என குற்றம் சாட்டினார் அந்நாட்டு
எதிர்க்கட்சியின் பாராளுமன்ற அங்கத்தினர் விஜிதா ஹெரத். மதத்தலைவர்கள், பொதுநிலைப்பிரதிநிதிகள்
மற்றும் அரசியல் தலைவர்களின் பங்கேற்புடன் நாட்டின் அமைதி குறித்து இலங்கையின் கத்தோலிக்க
காரித்தாஸ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உரையாற்றிய பாராளுமன்ற அங்கத்தினர்
விஜிதா, நாட்டின் நீடித்த அமைதிக்கான எவ்வித செயல்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை
எனக் குறை கூறினார். இதே கூட்டத்தில் கலந்துகொண்ட கொழும்புத்துறை புனித பிரான்சிஸ்
சேவியர் குருமடத்தின் இறையியல் துறைத்தலைவர் குரு பேசில் மங்களராஜா, யாழ்ப்பாணத்தில்
பேச்சு சுதந்திரம் காணப்படவில்லை எனவும், மக்கள் அச்சத்திலேயே வாழ்வதாகவும் தெரிவித்தார்.
இதில் கலந்துகொண்ட வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான அமைச்சர் திலன் பெரேரா, பல இனங்களையும்
பல கலாச்சாரங்களையும் கொண்ட இலங்கையில் , சிறுபானமை சமுதாயத்தினரின் குரல்கள், அரசியல்
அதிகாரமுடைய பெரும்பான்மையினரின் குரல்களால் மறைக்கப்பட்டுவிடக் கூடாது என்றார்.