ஆக. 02, 2011. தமக்கென்று ஒரு தனித்துவத்தை வகுத்து கொண்டு இயங்குவோர் மட்டுமே வெற்றி
பெறுகின்றனர்; அதே வேளை, குறுகிய இலட்சியங்கள் குற்றமாகவே கருதப்படும்,'' என, முன்னாள்
குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் கூறினார். கோவை நவக்கரையிலுள்ள ஏ.ஜே.கே., கல்லூரி
வளாகத்தில் நடந்த இளைஞர் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் குடியரசுத்தலைவர்
அப்துல்கலாம், இந்த பூமியில், இளைஞர்களின் ஆற்றல்தான் பெரிய ஆற்றல். இந்தியாவின் சமூக
பொருளாதார நிலையை மாற்றும் சக்தி மாணவர்களின் செழுமையான சிந்தனைக்கு மட்டுமே உண்டு. எனவே,
தனித்துவம், படைப்பாற்றல், புதுமை மற்றும் சுதந்திர சிந்தனைகள் நிறைந்தவர்களாக மாணவர்கள்
மாற வேண்டும் என கேட்டுக் கொண்டார். பெரிய பெரிய லட்சியங்கள், அறிவுத் தேடல், கடின
உழைப்பு, விடா முயற்சி போன்றவை மாணவர்களுக்கு அவசியம் என்ற அவர், குறுகிய லட்சியங்கள்
குற்றமாகவே கருதப்படும் எனவும் கூறினார். என்னால் முடியும், நம்மால் முடியும் என்னும்
எண்ணம் இந்தியாவால் முடியும் என்பதாக மாறும் என்ற கருத்தையும் மாணவர்களுடன் ஆன கேள்வி
பதில் நேரத்தின்போது எடுத்துரைத்தார் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம்