திருத்தந்தையின் இஸ்பெயின் நாட்டிற்கானத் திருப்பயணம் புதிய உயிர்த்துடிப்பை வழங்கும்
ஆக.01, 2011. இஸ்பெயின் நாட்டின் சமூக வாழ்வில் கத்தோலிக்க விசுவாசத்தின் தாக்கம் மிகக்குறைந்த
அளவிலேயே இருக்கும் நிலையில், திருத்தந்தையின் அந்நாட்டிற்கான இம்மாதத் திருப்பயணம் புதிய
உயிர்த்துடிப்பை வழங்கும் என கத்தோலிக்க செய்தி நிறுவனங்கள் தங்கள் நம்பிக்கையை வெளியிட்டுள்ளன. இம்மாதம்
18 முதல் 21 வரை இடம் பெறும் உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களையொட்டி இஸ்பெயினில் திருப்பயணம்
மேற்கொள்ளும் திருத்தந்தை, அந்நாட்டின் அரசக் குடும்பம், பிரதமர் ஆகியோரையும் சந்தித்து
உரையாட உள்ளார். கத்தோலிக்கர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்நாட்டில், அண்மைக்காலத்தில்
மணமுறிவுச்சட்டம் தளர்த்தப்பட்டது, கருக்கலைத்தல் மீதான தடைகள் அகற்றப்பட்டது, ஒரே பாலினத்
திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்கியது போன்ற திருச்சபை விரோத நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதைக்
குறிப்பிடும் செய்தி நிறுவனங்கள், உலக இளையோர் தின நடவடிக்கைகளிலிருந்து இஸ்பெயின் நாடு
நிறைய மதிப்பீடுகளைக் கற்றுக்கொள்ளும் என தெரிவித்துள்ளன.