2011ல் இதுவரை நடந்த திருத்தந்தையின் முக்கிய நிகழ்வுகள்
ஜூலை 29,2011. 2011ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இடம் பெற்ற திருத்தந்தை 16ம் பெனடிக்டின்
முக்கிய நிகழ்வுகளை வெளியிட்டுள்ளது திருப்பீடம். முதல் மூன்று மாதங்களில் இடம் பெற்ற
முக்கிய நிகழ்வாக, மறைந்த திருத்தந்தை 2ம் ஜான் பாலின் பரிந்துரையால் நடைபெற்ற புதுமையை
கடந்த ஜனவரி 14ம் நாள் ஏற்றுக் கொண்டதாகும் எனக் குறிப்பிட்டது திருப்பீடம். அதற்கு
அடுத்த நாள் இடம் பெற்ற, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கத்தோலிக்கத் திருச்சபையில் முழுமையாய்
இணைய விரும்பும் முன்னாள் ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபையினர்க்கென ஏற்படுத்தப்பட்ட முதல் திருஆட்சிப்பீடத்தை
அடுத்த நிகழ்வாகக் குறித்துள்ளது திருப்பீடம். பின்னர் பிலிப்பைன்ஸ் ஆயர்கள், கேரளாவின்
சீரோ-மலங்கரா ரீதி ஆயர்கள் ஆகியோரை அட் லிமினா சந்திப்பில் சந்தித்தது, பின்னர் மார்ச்
10ம் தேதி தவக்காலத்தில் திருத்தந்தையின் நாசரேத்தூர் இயேசு இரண்டாம் பாகம் நூல் வெளியிடப்பட்டது
போன்றவற்றைக் குறிப்பிட்டுள்ளது திருப்பீடம். பிப்ரவரியில், இரஷ்ய அரசுத்தலைவர், லெபனன்
அரசுத்தலைவர், ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் ஆகியோரைத் திருத்தந்தை சந்தித்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது.