ஒரு பிரித்தானிய அருட்சகோதரி நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்ற அரசாணை தவறானது – இந்திய
அரசு
ஜூலை27,2011. இந்தியாவில் ஒரு பிரித்தானிய அருட்சகோதரி நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்று
அரசால் கொடுக்கப்பட்ட ஆணை தவறானது என்று சொல்லி அச்சகோதரி தான் விரும்பும் வரை நாட்டில்
தங்கலாம் என அரசு அறிவித்துள்ளது. 1982ம் ஆண்டு மருத்துவத் தன்னார்வப் பணியாளராக இந்தியா
வந்த Montfort மறைபோதகச் சபை சகோதரி Jacqueline Jean McEwan, அன்று முதல் பெங்களூர் சுமனஹல்லி
மையத்தில் தொழுநோயாளர் மத்தியில் பணி செய்து வருகிறார். இவர் 24 மணி நேரத்துக்குள் நாட்டைவிட்டு
வெளியேற வேண்டுமென இரண்டு நாட்களுக்கு முன்னர் உள்துறை அமைச்சகத்தின் ஆணையைப் பெற்றார்.
எனினும் அமைச்சர் ப.சிதம்பரத்தின் தலையீட்டால் இவ்வாணைத் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இது
குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அம்மைய இயக்குனர் கிளேரிசியன் சபை அருள்தந்தை George Kannanthanam,
இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார்.