கர்தினால் நோயே காலமானார். திருத்தந்தையின் அனுதாபச் செய்தி
ஜூலை 25, 2011. வத்திக்கான் பேராலயத்தின் முன்னாள் முதுபெரும் தந்தையாக பதவி வகித்த கர்தினால்
விர்ஜில்யோ நோயே இஞ்ஞாயிறன்று இறைபதம் சேர்ந்ததைத் தொடர்ந்து தன் ஆழ்ந்த அனுதாபங்களை
வெளியிட்டு இரங்கற்தந்தி ஒன்றை அனுப்பியுள்ளார் பாப்பிறை 16ம் பெனடிக்ட். கர்தினால்
நோயேயின் மரணத்தையொட்டி அவரின் சகோதரி மரியா நோயேயுக்குத் திருத்தந்தை அனுப்பியுள்ள இரங்கற்தந்தியில்,
கர்தினாலின் குடும்பத்தினரின் துன்பத்தில் தானும் பங்குகொள்வதாகவும், அவருக்கானச் செபங்களுக்கு
உறுதிகூறுவதாகவும் தெரிவித்துள்ளார். கர்தினால் நோயே திருச்சபைக்கு ஆற்றியுள்ள ஒப்பற்ற
பணியும் அத்தந்திச்செய்தியில் குறிப்பிடப்பட்டுப் பாராட்டப்பட்டுள்ளது. 1922ம் ஆண்டு
மார்ச் 30ம் தேதி இத்தாலியின் பவியா மறைமாவட்டத்தில் பிறந்த கர்தினால் நோயே 1944ல் குருவாகவும்,
1982ல் பேராயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார். திருப்பீடத்தில் பல்வேறு பொறுப்புகளை
வகித்துள்ள இவர், 1991ம் ஆண்டு கர்தினாலாக உயர்த்தப்பட்டார். கர்தினால் விர்ஜில்யோ
நோயேயின் இறப்புடன் திருச்சபையில் கர்தினால்களின் எண்ணிக்கை 195 ஆகக் குறைந்துள்ளது.
இதில் 114 பேரே திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதிற்குட்பட்டவர்கள்